கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்றின் முன்பாக வைத்து கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (22) காலை செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்ற நுழைவாயிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கரைச்சி பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதுதொடர்பில் கேட்ட போது படம் தேவையென்று தெரிவித்துவிட்டு மீண்டும் ஊடகவியலாளர் பயணித்த மோட்டா் சைக்கிளையும் படம் எடுத்து இருவரும் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து புகைப்படம் எடுத்தவர் தொடர்பான விபரங்களை பெற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியதுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி